தமிழரசன் - மணப்பாறை செய்தியாளர்
================================================
மணப்பாறையில் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர், கிராம உதவியாளர் கைது
மணப்பாறையை அடுத்த தவளவீரன்பட்டியைச் சேர்ந்தவர் சிவாஜிகணேசன். இவர் தனது தந்தை இறப்புக்கு வாரிசுச் சான்றிதழ் பெற தனது தாய் நல்லம்மாள் பெயரில் மணப்பாறை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
வி. பெரியப்பட்டி பிர்கா வருவாய் ஆய்வாளரான ஜோதிமணி மனுவை வட்டாட்சியரிடம் அனுப்ப ரூ. 25 அயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது சிவாஜிகணேசன் ரூ.15 ஆயிரம் தர ஒப்புக்கொண்டதாகவும் அந்தத் தொகையை வி. பெரியப்பட்டி கிராம உதவியாளரான ராஜேஸ்வரி பெற்றுத் தரவும் முடிவானதாம்.
ஆனால் பணம் கொடுக்க விரும்பாத சிவாஜிகணேசன், இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார் அளித்தார். போலீஸாரின் வழிகாட்டுதலின் பேரில் மணப்பாறை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த சிவாஜிகணேசன், அங்கிருந்த வருவாய் ஆய்வாளர் ஜோதிமணி மற்றும் கிராம உதவியாளர் ராஜேஸ்வரி ஆகியோரிடம் லஞ்சத் தொகை ரூ.15 ஆயிரத்தை அளித்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் கருப்பையா, காவல்துறை ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் தலைமையிலான போலீஸார் ஜோதிமணி , ராஜேஸ்வரி ஆகியோரை கைது செய்தனர் .
0 Comments